Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநில கூடைப்பந்து போட்டி

பிப்ரவரி 06, 2023 01:45

நாமக்கல்லில் மாநில கூடைப்பந்து போட்டி
சென்னை அரைஸ் அணி - சென்னை ரைசிங் ஸ்டார் அணி சாம்பியன்


நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மாநில கூடைப்பந்து போட்டியில், ஆண்கள் பிரிவில், சென்னை அரைஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்கள் பிரிவில், சென்னை ரைசிங் ஸ்டார் அணி முதல் பரிசு பெற்றது.


நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் திருச்செங்கோடு பிஆர்டி ஸ்போர்டஸ் கிளப் சார்பில், மாநில அளவிலான சேம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 5 நாட்கள் நடைபெற்றது. மாநில கூடைப்பந்து அசோசியேசன் ஒப்புதலுடன் நடைபெற்ற, இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 11 அணிகளும் என மொத்தம் 31 அணிகளில் 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட விளையாடினர். 


முதல் சுற்றுப்போட்டிகள் நாக்அவுட் முறையிலும், அடுத்த போட்டி லீக் அடிப்படையிலும் நடைபெற்றன. கூடைப்பந்து போட்டி, ஆண்கள் பிரிவு சென்னை அரைஸ், நாகர்கோவில் ஆசியன் கூடைப்பந்து அணி, தமிழ்நாடு போலீஸ் அணி, கோவை குமரகுரு அணி ஆகிய 4 அணிகளும், பெண்கள் பிரிவில் சென்னை 0205 அணி, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணி, சென்னை ரைசிங் ஸ்டார், எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி என 4 அணிகளும் 'லீக்' போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டன.

இதில் அதிக புள்ளிகள் பெறும் அணி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி ஆண்கள் பிரிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற தமிழ்நாடு போலீஸ் அணியும், சென்னை அரைஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இறுதியில், இரு அணிகளும் தலா 69 புள்ளிகளை பெற்று சம நிலையில் இருந்தன. எனவே, கூடுதலாக 5 நிமிடம் கொடுக்கப்பட்டது. இறுதியாக சென்னை அரைஸ் அணி 82 க்கு 78 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்றது.

2-ம் பரிசு தமிழ்நாடு போலீஸ் அணிக்கு கிடைத்தது. இதே போல் 3 வது மற்றும் 4 வது இடத்திற்கான போட்டி இடத்திற்கான போட்டியில் கோவை குமரகுரு கல்லூரி அணியும், நாகர்கோவில் ஆசியன் கூடைப்பந்து அணியும் மோதின.

இதில் கோவை குமரகுரு கல்லூரி அணி 91 க்கு 74 என்ற என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 3-வது பரிசை தட்டிச் சென்றது. நாகர்கோவில் ஆசியன் கூடைப்பந்து அணிக்கு 4-வது பரிசு கிடைத்தது.


பெண்கள் பிரிவு, கூடைப்பந்து போட்டி அதிக புள்ளிகள் பெற்ற சென்னை ரைசிங் ஸ்டார் அணியும், கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணியும் இறுதிப் போட்டியில் மோதின.  இந்தப் போட்டியை தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். இதில் சென்னை ரைசிங் ஸ்டார் அணி 78 க்கு 63 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதல்பரிசை பெற்றது.

கோவை பி.எஸ்.ஜி. அணிக்கு 2-வது பரிசு கிடைத்தது. இதேபோல் பெண்கள் பிரிவில் 3-வது இடத்திற்கான போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணியும், சென்னை 0205 அணியும் மோதின.

இதில் சென்னை 0205 அணி 50 க்கு 32 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று 3-வது இடத்தை பிடித்தது. சென்னை எஸ்.ஆர்.எம்.கல்லூரி அணிக்கு 4-வது பரிசு வழங்கப்பட்டது.


தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், போட்டியில் வெற்றிபெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.60 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.50 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.40 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் நடராஜன், சேர்மன் பாண்டியராஜன், செயலாளர் முரளி, துணை தலைவர் பி.ஆா்.டி.பரந்தாமன், ரவி, நாமக்கல் மாவட்ட சிறு குறுந்தொழில்கள் சங்க தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்